கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் அடை மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
இதேவேளை, இங்கினியாகல குளக்கட்டின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், அதன் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த இங்கினியாகல சுற்றுவட்டார மக்கள் பீதியடைந்துள்ளதாகவும் எமது மாவட்ட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் பாடசாலை சிலவற்றுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், அரச காரியாலயங்கள் சிலவும் செயலிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஒரு சிலர் பீதியினால் இடம்பெயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
16 வருடங்களுக்குப் பின் சேனநாயக்கா சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் விழிப்பாக இருக்க பொலிஸாரால் ஒலிபெருக்கி மூலம் முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணமுள்ளன.
மக்கள் மீண்டுமொரு இடப்பெயர்வுக்கு தயாராகியுள்ளனர். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.









எகிப்து நாட்டில் அதிபர் ஹேஸ்னி முபாரக்கின் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கலவரமாக மாறி கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த உமர் சுலைமான் என்பவரை துணை அதிபராக முபாரக் நியமித்தார். இருந்தும் கலவரம் ஓய்ந்த பாடில்லை. நேற்று தலைநகர் கெய்ரோவின் மையப் பகுதியில் உள்ள தரிர் சதுக்கத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.